பின்வரும் வடமொழிச் செய்யுள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் இரண்டாம் ப்ராகாரத்தின் தென்புறச்சுவரில் கல்வெட்டாக அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு ஒரு தமிழ்க்கல்வெட்டை அடுத்து அதன் மொழிபெயர்ப்பாக அமைந்துள்ளது. தமிழ்ப்பகுதியிலுள்ள வானியற்குறிப்புக்களைக் கொண்டு இதன் காலமாக பொயு 1270 மார்ச் 24 எனத் தீர்மானிக்க இயல்கிறது.
இந்தக் கல்வெட்டு 1892 ஆமாண்டு தொல்லியல்துறை அறிக்கையில் 51 ஆம் எண்ணோடு தெரிவிக்கப் பெற்றுள்ளது. பிறகு தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி நான்கில் 499 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றது. இந்தக் கல்வெட்டு வீரபாண்டியரிடமிருந்து தாம்பெற்ற ரத்னங்கள் பதித்த மகுடம் இரு சாமரங்கள் மற்றும் களஞ்சி ஆகியவற்றை சொக்கவில்லி பட்டரான முதலியார் கரியமறி என்பவர் ரங்கநாதருக்கு அவற்றை அளித்ததைக் குறிப்பிடுகிறது. இந்தப் புலவர் ஸகலவித்யா சக்ரவர்த்தி என்னும் பட்டம் பெற்றவர். திருப்பாடகத்தைச் சேர்ந்தவர். இந்தக் கல்வெட்டின் தமிழ்ப்பகுதியைக் கொண்டு வீர ராமநாததேவரின் பதினைந்தாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது என்பதை உய்த்துணரவியல்கிறது.
வரி 1 | : | यत्प्रीतात् वीरपाण्ड्याच्श(च्छ)तमखमुकुटनयस्यहस्तारविन्दाद्विद्यासाम्राज्यचिह्नम् भुवि |
வரி 2 | : | सकलकलासार्वभौमेन लब्धम्। तत्तेनोद्दीप्तरत्नं मकुटमपि च तच्चामरद्वन्द्वमिन्दुच्छाया |
வரி 3 | : | चोरं कळाची सचिवमुपपदे रंगधाम्ने त्रिधाम्ने। |
பொருள்
பாவகை – ஸ்ரக்தரா
यत्प्रीतात् वीरपाण्ड्याच्श(च्छ)तमखमुकुटनयस्यहस्तारविन्दा
द्विद्यासाम्राज्यचिह्नम् भुवि सकलकलासार्वभौमेन लब्धम्।
तत्तेनोद्दीप्तरत्नं मकुटमपि च तच्चामरद्वन्द्वमिन्दु
च्छायाचोरं कळाची सचिवमुपपदे रंगधाम्ने त्रिधाम्ने।
ஸகலகலா ஸார்வபௌமர், இந்த்ரனின் திருமுடியில் கைத்தாமரையைப் பதிக்கும் பெருமையுடைய வீரபாண்டியரை மகிழ்வித்து அவரிடமிருந்து கல்விக்கு சக்ரவர்த்தியானமைக்கு அடையாளமாக பெற்ற ரத்னங்கள் ஒளிர்வதான மகுடத்தையும் சந்திரனின் அழகைக் கவரும் சாமரங்கள் இரண்டும் ஒரு களஞ்சியையும் மூவுலகிற்கும் அதிபதியான ரங்கநாதருக்கு அளித்தான்.
இந்தப் பகுதியில் அரசனின் பெயர் குறிப்பிடப்பெறாவிட்டாலும் அவற்றைத் தமிழ்ப்பகுதியினின்று பெறமுடிகிறது.
இந்த் கவிஞன் பாடகத்தில் வசிப்பதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்தப் பாடகம் காஞ்சியின் பாண்டவர்பெருமாள் கோயிலான திருப்பாடகமாகலாம்.