இந்தக் கல்வெட்டு பாதாமியிலுள்ள பெத்தாரப்பா கோயிலின் பின்பகுதியில் அமைந்துள்ளது. அங்கு 250 அடி உயரத்திலுள்ள ஒரு மலைப்பாறையின் நெருங்க முடியாத பகுதியில் அமைந்துள்ளது. கீழ்மேற்காக அமைந்துள்ள ஒரு பெரும்பாறையில் அமைந்துள்ள இந்தக் கல்வெட்டிற்குச் செல்லும் பாதையும் மிகக் குறுகலானது. இந்தக் கல்வெட்டு அந்தப் பாறையின் வடபுறத்தில் அமைந்துள்ளது.
இந்தக் கல்வெட்டை தார்வாரிலுள்ள திரு. ஆர்.எஸ்.பஞ்சமுகி அவர்கள் மிகுந்த முயற்சியோடு எபிக்ராஃபியா இண்டிகாவின் இருபத்தேழாம் தொகுதியில் இரண்டாம் எண்ணோடு பதிப்பித்தார். இந்தக் கல்வெட்டு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துக்களாலானது. இந்தக் கல்வெட்டு மூன்றடி நான்கங்குலமான சதுர அளவில் அமைந்துள்ளது. வடமொழியில் அமைந்த இந்தக் கல்வெட்டு அந்த நூற்றாண்டின் வரிவடிவமான தெலுகு-கன்னட வரிவடிவிலேயே அமைந்துள்ளது.
இந்தக் கல்வெட்டின் முதல் வரி உரைநடையாக அமைந்துள்ளது. ஏனைய வரிகள் வடமொழிச்செய்யுட்களாக அனுஷ்டுப் என்னும் பாவகையில் அமைந்துள்ளன. இந்தக் கல்வெட்டு சாளிக்ய அரசனைக்குறிப்பிடுகிறது. சக ஆண்டு 465-ஐயும் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்பெறும் மன்னன் வேதவிதிகளின் படி அச்வமேதத்தைப் புரிந்ததாகவும் ஹிரண்யகர்ப்பம் ஆகியவற்றை மேற்கொண்டதாகவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டுதான் சக ஆண்டுகளைக் குறிப்பிடும் நேரடியான கல்வெட்டுக்களில் மிகப்பழமையானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஸிம்ஹஸூரி இயற்றிய லோகவிபாகம் என்னும் நூலே சக ஆண்டுகளைக் குறிப்பிடுவதில் பழமையான குறிப்பாகும்.
இதில் குறிப்பிடப்பெறும் அரசன் வாதாபியை கோட்டையோடு பொலியச்செய்த செய்தியை இந்தக் கல்வெட்டு தருகிறது. அச்வமேதம் முதலியவற்றை செய்ததாக இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் அரசன் முதலாம் புலகேசி ஆவான். இது இரண்டாம் புலகேசியின் ஐஹோளே கல்வெட்டும் உறுதி செய்வதால் திண்ணமாகிறது. இதுதான் முதலாம் புலகேசியின் பழமையான சாஸனமாகும்.
வரி 1. | स्वस्ति [|]शकवर्षेषु चतुश्शतेषु पञ्चषष्टियुतेषु |
வரி 2. | अश्वमेधादियज्ञानां यज्वा श्रौतविधानतः। |
வரி 3. | हिरण्यगर्भसम्भूतश्चाळिक्यो वल्लभेश्वरः।[*|1] |
வரி 4. | धाराधरेन्द्र[1] वातापिमजेयम्भूतये भुवः[*।] |
வரி 5. | अधस्तादुपरिष्टाच्च दुर्ग्गमेतदचीकरत्[*।।2] |
ஸ்வஸ்தி [| ]
மங்களம்
- ஶகவர்ஷேஷு சதுஶ்ஶதேஷு பஞ்சஷஷ்டியுதேஷு
சகவருடங்கள் நானூற்று அறுபத்தைந்துடைய வருடத்தில்
- அஶ்வமேதா⁴தி³யஜ்ஞானாம்ʼ யஜ்வா ஶ்ரௌதவிதா⁴னத:|
வைதிக முறைப்படி அச்வமேதம் முதலிய வேள்விகளைச் செய்தவனான
- ஹிரண்யக³ர்ப⁴ஸம்பூ⁴தஶ்சாளிக்யோ வல்லபே⁴ஶ்வர:| [*| 1]
ஹிரண்யகர்ப்பத்தில் மீண்டும் பிறவியெடுத்த சாளிக்ய வல்லபேச்வரன்
- தா⁴ராத⁴ரேந்த்³ர வாதாபிமஜேயம் பூ⁴தயே பு⁴வ:[*| ]
உலகின் நன்மைக்காக மலையிடையே வெல்லமுடியாத வாதாபியை
- அத⁴ஸ்தாது³பரிஷ்டாச்ச து³ர்க்³க³மேதத³சீகரத்[*|| 2]
மேலிருந்தும் கீழிருந்தும் (கடக்கவொண்ணா) கோட்டையொடு செய்வித்தான்.
வேதமுறைப்படி அச்வமேதம் புரிந்தவனும் ஹிரண்யகர்ப்பத்தில் மீண்டும் பிறந்தவனுமான சாளிக்ய வேந்தன் வல்லபேச்வரன் மலையொடு கூடிய வாதாபியை எவராலும் கடக்கவொண்ணா கோட்டையொடு புரிந்தனன் என்பது இதன் பொருளாகும்.
[1] धाराधरेन्द्रम् ஆகவும் இருக்கலாம்.
thank you for your information.-k.sridaran.
Gopu took considerable efforts to locate the inscription. The temple that you are referring should be upper Shivalaya which some call it Vishnu alaya
மாமல்லன் நரசிம்ம வர்ம பல்லவனின் வாதாபி கல்வெட்டுக்கு உள்ள இடத்தில் இந்த கல்வெட்டும் முதன்முதல் புலிகேசி பதிப்பித்ததாகவும், நரசிம்மவர்மன் அதற்கு மேலே எழுதியபடியால் இவ்விடத்தில் பின்னாளில் சாளுக்கியர்கள் இக்கல்வெட்டை மீண்டும் செதுக்கியிருக்கலாம் என்றும் கே.வி.ரமேஷ் என்பவர் ஆய்வுரை எழுதியுள்ளார் – சுட்டி கீழே
http://www.dli.gov.in/data/upload/0046/736/HTML/00000029.htm
தொடரும் சுட்டி கீழே
http://www.dli.gov.in/data/upload/0046/736/HTML/00000030.htm
நரசிம்ம பல்லவன் ஒருவேளை முதலாம் புலிகேசியின் கல்வெட்டை அழித்திருக்கலாம் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை. இரு கல்வெட்டுகளும் நடுவில் சீராகவும் இடது வலது புறங்களில் தேய்ந்துமுள்ளன.